அன்புக்கோர் அன்னை! (கவிதை)
அன்பு தந்தாள்
அரவணைத்து காத்திட்டாள்! – அவள்
அருமைதனை
அருகிருந்து அறியவில்லை
பிரிந்திருந்தும் புரியவில்லை – நீ
பிரிந்திருந்தும் புரியவில்லை!
தெய்வமாய் அவளை நீ
வணங்கிடத் தேவையில்லை
உன்னில் ஓர்
அங்கமாய் வைத்து விடு – ஓர்
அங்கமாய் வைத்து விடு!
கண்ணாக உனைக் காத்தாள்
கண்ணீர் தான் சுமந்து
கருணையால் உனை அணைத்தாள்
தேகம் மெலிந்தாலும் – தன்
தேகம் மெலிந்தாலும்
சோகம் தான் சுமந்தாலும்
சோர உன்னை விடமாட்டாள்
சுகமாய் வாழ வழிவகுத்தாள் – நீ
சுகமாய் வாழ வழிவகுத்தாள்!
அறிவில் நீ உயர்ந்திட்டால்
ஆனந்தம் தான் கொள்வாள்
ஆறு பிள்ளை பெற்றாலும் – அவள்
ஆறு பிள்ளை பெற்றாலும்
வேறுபாடு காட்டமாட்டாள்! -அங்கே
வேறுபாடு காட்டமாட்டாள்!
பிள்ளை உன்னை வளர்த்தெடுக்க
கண்களில் நீர் சுமந்தாள்
மெய்யினில் வலி சுமந்தாள்
பயிராய் நீ வளர
உரமாய் அவள் இருந்தாள்!
சான்றோனாய் நீ உயர
சக்தியெல்லாம் அவள் கொடுத்தாள்! -தன்
சக்தியெல்லாம் அவள் கொடுத்தாள்!!
உதிரத்தில் சுமந்தவளை – உன்னை
உதிரத்தில் சுமந்தவளை
பதறவே வைக்காதே!
கதறி அவள்
கலங்கவே வைக்காதே!!
கண்ணீரில் மிதந்தவளை – தினம்
கண்ணீரில் மிதந்தவளை
தண்ணீரில் ஒரு தாமரையாய் – இனி
தண்ணீரில் ஒரு தாமரையாய்
தலைநிமிர்ந்து அவள் சிரிக்க
தண்டாய் நீ இருந்து – தாமரைத்
தண்டாய் நீ இருந்து
தாயவளைக் காத்து விடு! – நல்ல
தனயன் என்று வாழ்ந்து விடு!
-பத்மெஐகன்..
நல்ல கருத்து
நயமாக எடுத்தரைக்கப்பட்டுள்ளன.
rammalar.wordpress.com