மங்கள சமரவீரவை படுகொலை செய்ய முயன்ற இருவருக்கு கடூழிய சிறை // வேலணை குடும்பநல உத்தியோகத்தரின் சடலம் கொழும்புக்கு அனுப்பிவைப்பு..!
மங்கள சமரவீரவை படுகொலை செய்ய முயன்ற இருவருக்கு கடூழிய சிறை..!
சிறீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவை படுகொலைசெய்ய முயற்சித்த இரண்டு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரவை படுகொலை செய்வதற்காக புலிகளுக்கு தகவல்களை வழங்கிய இரண்டு பேருக்கு 11ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் கொழும்பு அல்லது மாத்தறை ஆகிய இடங்களில் மங்கள சமரவீரவை படுகொலைசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீ.ஜீ.ரணவீர எனப்படும் மல்லி மற்றும் சம்பத் துசாரா ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படுகொலைச் சம்பவம் குறித்த தகவல் தெரிந்திருந்தும் குறித்த நபர்கள் பொலீசாருக்கு இந்தத் தகவல்களை வெளியிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வேலணை குடும்பநல உத்தியோகத்தரின் சடலம் கொழும்புக்கு அனுப்பிவைப்பு..!
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் உடல் நேற்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. கடந்த 12ம்திகதி வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தர்ஷிகாவின் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவத்துக்கு வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் காரணமென தர்ஷிகாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்